Wednesday, May 20, 2020

கூதல் காற்று



 

chrism3's published descriptions of "a cold night"

...கூதல் காற்று...


கூதற்காற்றெனும் பேய் தமதாற்றலினால்
செய்யும் கூற்றுகள்தான் என்றும் தோற்றிடுமோ ?

ஊழ்வினைதனையே ஊன்துளை வழியே
அந்தி மரிக்குமுன்னே உந்தி செலுத்துகிறாய்!

வெறும் உலர்வலியை பெரும்வளர் உழியாய்
உருமாற்றுகிறாய் - ஊறேற்றுகிறாய்!

உளப்பார்கடலை கொடுநஞ்சரவால்
அசுர்தேவர்கள் போல் கடையெண்ணுகிறாய்!

நடுநிசி முழுதும் கடை அமிழ்தினையே
கடுபசிவரியன் போல் உண்ணுகிறாய்!

செந்தீக்கனலில் சமை இறைச்சியதாய்
எமை வாட்டுகிறாய் எரிமூட்டுகிறாய்!

உயிர்தொடு இரியை இனமாக்கியதாய்
இக்கொடு வெறியை உனதாக்கியதார்?

Wednesday, May 16, 2012

நான் + நாம் = நீ





தலைவன்:

மனப்பெட்டகத்தில் இட்டநின் னகத்தை இன்று தட்டத் துணிந்தணன் உளம் பட்டத் துயரத்தால்...

உனை காணும் கணம் யாவும் கன்னல் கட்டுண்டு கனிச்சாறு பருகிடும் மனம் - உனை நீங்கும் கணம் யாவும் கடும் நஞ்சுண்டு கனல் பருகிடும் தினம்...
                
நிறை குடமாய் தழும்பும் என் காதலுக்கு உறைவிடமாய் உன் உளம் வேண்டும்...உலகம் அதிர காதல் உரைத்து உள்ளம் வழிய அன்பை நிறைத்து காலம் மறந்து கலக்க வேண்டும், காற்றுப் படகில் மிதக்க வேண்டும்...

உன்னோடு நான் கலந்து நாமாதல் போய் என்னோடு நாம் கலந்து நீயாதல் வேண்டும்...

குவளைப்பூ நுதல் விரிந்த நன்மணம் நின் இன்பதில் கேட்டு என்மனம் கொளல் வேண்டும்...

இன்மனத்தில் இருப்பவை இவையென்று உரைத்துவிட்டேன்... தயவுகூர்ந்து மறுப்பாயெனில் மறுப்பேனென உரையாமல் இறப்பாய் என உரை...


தலைவி: 

மடம் தொழும் மடந்தை இவள். உடன் பிறந்த தமையன் சொலும், உற்றார் சொலும், உறவினர் சொலும் மறவாது நடப்பவள் நான்.
      
பெற்றோர்தனுக்கு பெருந்துயர் தொடுக்கும் இக்காதலை உற்றேனெனில் உலகு பழிக்கு உள்ளாவர் எந்தையும் தாயும்....

மறுப்பேனென நானுரைத்தால் இறப்பேனென சொல்லும் நினக்கு உயிர் என்பது ஊதல் காற்றோ ?

அழகு கொழிக்கும் இவ்வளமை கரைய, இளமை கரைய நின் காதலும் கரையும் பார்....



தலைவன்:

வளமை கரைய, இளமை கரைய அகவை கரையலாம்...
இரவு கரைய, நிலவு கரைய நினைவு கரையலாம்...
கனவினோடு உறங்கும் நாளில் உணர்வு கரையலாம்....
கடுங்கடலின் ஆற்றல்தனில் உலகும் கரையலாம்...
உடல் கரைய, உயிர் கரைய உளக் காதல் கரையுமோ ?
நிதம் கரைக்கும் விதம் கரைக்க மனக் காதல் குறையுமோ?

உந்தையும் தாயும் உனை நொந்து தலைசாய உந்துவேனோ உன்னை நான் ?
உலகோர் பழிக்க உன்னுள்ளம் வதைத்து நினைசேர ஒப்புமோ நெஞ்சம் எனக்கு ?


உற்றார் உறவினர் புடைசூழ நின் தமையன் அணிவித்த மோதிர விரல் கொண்டு வெண்மெட்டி மென்விரல் மாட்டி, கண்பறிக்கும் பன்வண்ண மாலை சூட்டி, மங்கல மஞ்சள் கயிற்றை நின் நெஞ்சில் படர காதல் நிறைத்து இறுகப் பூட்டி, என் மனம் சேர்த்து நின்னை எந்தன் மனையாள் ஆக்குவேன்...
விதியின் வன்மையால் பிறன் மனையாள் நீயானால்
என் மனை துறப்பேன், மனை நிலம் துறப்பேன், ஊர் துறப்பேன், உறை துறப்பேன், உறவு துறப்பேன், உயிர் வளர்க்கும் உண்டி துறப்பேன், நட்பு துறப்பேன், நகை துறப்பேன், நல்லுடை துறப்பேன், உடல் மெலிந்து தசை துறப்பேன். இவை கடந்தும் உயிர் மீந்தால் இறுதியாக அதையும் துறப்பேன்....

தலைவி:

இத்தனை துறக்க நின்மனம் ஒப்பும்போது இத்துணை துறக்க ஒப்புமோ மனம் எனக்கு ?

வெண்மெட்டியும், மெத்த நன்மாலையும், மஞ்சள் தோய்த்த மங்கலக் கயிறும்  உனையன்றி வேறொன் சூட்ட இனியும் விடுவேனோ ?
பிறவரன் தோளில் மாலையிடுவேனோ ?
இனி உன்னில் துவங்கி உன்னில்தான் முடியும் எனதுயிர்...

மூத்தோர் சம்மதியில் மணநாளில் இணைவோம்
முற்றாத காதல் நிறைத்து புது வாழ்வை புனைவோம்....

Wednesday, June 29, 2011

கதம்பம்


***என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன் என்றால் உண்மையில் நான் என்னை வெறுக்கிறேன் என்றுதான் பொருள்***

***கவலை என்பதே இல்லாத ஒரு உலகத்தில் "நான் இன்பமாய் வாழ்கிறேன்" என்று சொல்லுதல்கூட ஒரு முட்டாள்தனம்தான்***

***என்னை நிராகரிப்போர் ஒவ்வொருவரையும் முழுதாய் சபிக்கத் தோன்றுகிறது, எனினும் காரணமற்ற நிராகரிப்பை நொந்து சபிக்ககூட சக்தியற்று போகிறது மனம்***

***ஜனனத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள ஞானமில்லை...
மரணத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள நாமே இல்லை***

***ஆறுதல் மொழியும் ஒவ்வொருவரும் இழப்புகளை மறக்கச் சொல்கிறார்கள்;
காலமென்னும் கருப்புத்துணியால் கண்ணீரை மறைக்கச் சொல்கிறார்கள்;
மறக்கவும், மறைக்கவும்தான் மனமென்றால்
மனம் உண்மையில் மனமல்ல நினைவுகளை புதைக்கும் மயானம்***

***நான் அதிகம் ஆசைபடுவதில்லை, ஆனால் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
ஏமாற்றத்தின் வெப்பத்தில் என் எதிர்பார்ப்புகள் கருகும்போதுதான்
மனம் தெளிந்து உணர்கிறது ஆசையின் பிரதியே எதிர்பார்ப்பென்று***

***என்னோடு நானும்,
என்னோடு பிரிவும்
எப்போதும் பிரிவதில்லை***

***மகிழ்ச்சியாய் வாழ தத்துவங்களை படியுங்கள், ரசியுங்கள், உணருங்கள், பின்பற்றாதீர்.***

***ஒரு தங்கையிடம் தமையன் தாயாகிறான்.
ஒரு தம்பியிடம் தமக்கை தந்தையாகிறாள்.
நான் பல தங்கைகளுக்குத் தாய்... நீங்கள்?***

***தேடாமல் கிடைப்பது நட்பு
தேடியே தொலைவது காதல்
தொலைந்தபின் தேடுவது வாழ்க்கை
வாழ்ந்தே தொலைவது விதி !!!***

***மன்னிப்பின் மகத்துவம் தரும்போதைவிட பெறும்போதுதான் அதிகம் உணர்த்தப்படுகிறது***

***இருப்பவனுக்கு அலட்சியம்
இழந்தவனுக்கு வலி
இல்லாதவனுக்கு ஏக்கம்
மனமென்னும் பெட்டகத்தில் சாவியற்ற பூட்டாய் மேற்கூறிய மூன்றும்***

***முதலில் இருப்பதை கொடுங்கள்,
பிறகு இல்லாததை உருவாக்குங்கள்***

***நட்பின் செறிவும், சரிவும் பிரிவில்தான் விளங்குகிறது....***

***வருடம் மட்டுமே ஒவ்வொரு வருடமும் பிறக்கின்றது, ஒவ்வொரு வருடமும் இறக்கின்றது***

***அன்று என் தனிமைக்குத் துணையாய் சில கண்ணீர் நினைவுகள்,
இன்று அத்துணையை இழந்து தனிமையில் என் தனிமை***

***இருள் மட்டுமே உறக்கத்தை கொணர்வதில்லை.
இடையறாத உழைப்பும்,
இனிய நல்லுணவும்,
இன்பம் நிறைந்த மனமும்,
இரைச்சலற்ற சூழலும்,
இணைந்து வருகையில்
இமைகள் உறக்கத்தை நோக்கி
இறுகுதல்
இயல்பே***

*** எனது சுட்டு விரல் என்னை நோக்கி திரும்பும்போது நான் நல்லவனா? என்ற கேள்வி எனக்குள் 
எழுந்தாலும் நல்லவன்தான் என்று அதற்கு முன்பே பிறரிடம் வாதாடத் துவங்குகிறது 
என் மனம்*** 

***துன்பம் இல்லா துறவி
பெண்கள் இல்லா பிறவி
இவை கேட்பதற்கு இனிது ஆனால் வாழ்வதற்கு கொடிது***

***தீமை தாமாய் நிகழும், நன்மையை நிகழ்த்தத்தான் நாம் தேவை***

***துன்பம் என்பது துளிர்த்து வளரும் செடியல்ல... அது ஒரு கோடை மழை... ***

***நெரித்துக் கொல்ல நினைக்கும் சில நினைவுகள் எப்போதும் இறப்பதில்லை... நேர்மறை எதிர்மறை இரண்டும் இதனுள் அடங்கும்...***
 
 
***பழகுவதற்கு முன் பெண்ணை ஆணும்
பழகிய பின் ஆணை பெண்ணும்
மதிப்பதில்லை***

***கேட்காமல் கிடைத்தல் கொடுப்பினை, கேட்டுப் பெறுதல் பிச்சை.
உங்களுக்கான அன்பு கொடுப்பினையாக கிடைக்கட்டும், பிச்சையாக கிடைத்தல் வேண்டாம்.
பிறர் வெறுப்புக்கு மட்டுமே உள்ளாகும் இதயம் இறப்பெனும் இயற்கையோடு இணைதலே மேல்***

***மனிதம் மறந்து மிருகம் வளர்தற்கு எளிதாய் கிடைக்கும் இரையும் ஒரு காரணம்***

***சறுகுகள் என்றும் மிதிபடும் போதுதான் கவனத்தை ஈர்க்கின்றன***

***அழகு ரசிக்கப்படலாம், கவரப்படலாம்... ஆனால் அது ஒரு போதும் நிரந்தரத்தை தீர்மானிப்பதில்லை***

***வெகு சீக்கிரத்தில் வெறுக்கப்படுபவர்கள் வெளிப்படையாய் உள்ளவர்கள்தான்***

***பொதுவான நாகரீகம் வரையறுக்கப்படும் வரையில் அநாகரீகம் என்பதற்கு நடைமுறையில் அர்த்தமில்லை***

***ஒரு சிந்தனைவாதியின் சேமிப்பு கணக்கில் அதிகம் இருக்க வேண்டிய செல்வம் நேரம் மட்டும்தான்***

***மனம் என்னும் சவவெளி - புதைக்கப்பட்ட நினைவுப் பிணங்களை புதுப்பிக்கத் தோண்டுகையில் இன்பத்தின் நறுமணத்தை விட துன்பத்தின் துர்நாற்றமே அதிகம் வீசுகிறது... பிணம் என்று மணந்தது இன்று மணப்பதற்கு***

***வெறுமை சுமந்த உள்ளத்தின் கவிதை
                                        வெற்றுக் காகிதம்!***

 ***கானல் நோக்கி தாகத்துடன் பயணம்
         நாணலாய் இருந்த வாழ்க்கை துறந்து***




Wednesday, May 25, 2011

இன்பக் குளத்தில் இரவல் மீன்கள்

இழந்ததெதனை இருக்கப்பெற்றேன் ?
கடந்ததெதனை மறக்கப்பெற்றேன் ?
மறைந்ததெதனை நினைக்கப்பெற்றேன் ?
மறுத்ததெதனை கிடைக்கப்பெற்றேன் ?

இழந்ததும் கடந்ததும்
மறைந்ததும் மறுத்ததும்
உறவாமல் போகையில்
இறவாமல் தொடர்கையில் - மன
இன்பக் குளத்தில் இரவல் மீன்கள்
துள்ளிக் குதித்தலுமுண்டோ ? - அவை
உள்ளக்களிப்பினை சுண்டி இழுத்திட - அதில்
தூண்டிர் புழுக்களுமுண்டோ ?

Friday, August 27, 2010

அன்னையாய் பிறந்திட அருந்தவம் ஆற்றிடல் வேண்டும்



உயிரைச் சுமக்கும் உன்னதம் அவளை கடவுள் என்பான் நாத்திகன் கூட !
உயிரும் மெய்யும் உடன் வரும் அஃகும் உறுப்பாய் உரித்த தமிழினைப் போல 
கருவில் உயிரையும் உருவில் மெய்யையையும் உளத்தில் எஃகையும் அணியாய்ப் புனைந்தவள். 
உருக்கும் இசையில் சிந்தும் அவளே !
பெருக்கும் இன்பத்தில் கந்தும் அவளே !
வெண்ணெய்த் தின்கையிலும், வெறும் வயிற்றில் துயில்கையிலும்
அன்னையுந்தன் அதட்டல் சத்தம்
முன்னுக்குப்பின் முரணாய் இருக்கும்.
உண்ணும் பருக்கையில் எல்லாம் உன்முகமே தெரியுதம்மா !
உப்பும், புளி மிளகும் கலந்த ருசி - உன் உள்ளங்கைக்கு உரியதம்மா ! 
ஏழு மலைத் தங்கங்கள் இழந்தாலும் பெரிதில்லை 
அன்னை உந்தன் அரவணைப்பில் ஆறுதல் கிடைத்துவிட்டால் - 
ஆயிரம் சொர்க்கங்கள் காலடியில் கிடக்குமம்மா !
சுட்ட பால் குவளை தொட்டுவிட்டேன் சிறுவயதில் 
எட்ட நின்றிருந்த நீயதனைப் பார்க்கவில்லை. 
சுட்டு விரல் தனிலே கொடும் சூட்டை உணர்ந்தவுடன்   
கத்தி அளப்பரித்தேன், அழுகையிலே உனையழைத்தேன்.  
உயிரினை இழக்கும் வலி உன்கண்ணில் பார்த்திட்டேன், 
நீ துடித்த துடிப்பினிலே என் வலியை மறந்திட்டேன். 
தீக்குழம்பை குடிதாற்போல் நீ துடித்த அந்நொடிகள்
நினைத்தாலும் வலிக்கிறது, இருந்தாலும் இனிக்கிறது...
"பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா" என்றான் பாரதி,
இப்பிள்ளைக்கு கனியமுதே என்அம்மா  -
தீந்தமிழின் தீராக் கவிகளிலும், வற்றா வரிகளிலும் 
உனை வர்ணித்துப் புகழ்ந்தாலும் பத்துமா பதங்கள் 
என் பத்திரை மாற்றுத் தங்கமே உனை வாழ்த்த?
கருப்பை எனக்கிருந்தால் மறுமையில் உன்னை ஈன்றிருப்பேன்,  
ஆணாய்ப் பிறந்ததினால் அப்பலனும் எனக்கில்லை !
இம்மைப் பிறப்பினையும் குறையுரைக்க ஏதுமில்லை - ஏனெனில்
குருதிப் பாலையும் தசையுள்ள தலையணையும் 
உன்மடியில் கண்டதனால் உன்னதமே இப்பிறப்பும் !

Monday, August 16, 2010

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )


செத்ததடி என் நெஞ்சம்
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன்!
அத்தனையும் பொய்யோடி ?
தத்தையுனக்குத் திருமணமாம் - உன்
அத்தையவள் உரைக்கக் கேட்டேன். 
மத்தை தயிரில் கடைந்தது போல் 
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல் 
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல் 
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய 
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை 
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி 
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி 
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று 
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும் 
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின் 
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?

Sunday, August 15, 2010

காதல் கவி ( Poet for Love )

காதல் கவி எழுதிட கரமிரண்டும் துடிக்குதடி 
மனம் ஏனோ மறுக்கிறது 
கசங்கும் காகிதத்திலா கண்மணியின் கவியென்று...
உயிரில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன் 
மனம் ஏனோ மறுக்கிறது
பிரியும் உயிரிலா பிரியமானவளின் கவியென்று...
உடலில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன்
மனம் ஏனோ மறுக்கிறது
எரியும் உடலிலா என்னவளின் கவியென்று...
கண்ணில் எழுதிடவோ ? 
கண்ணீர் வந்தழித்திடுமே !
விண்ணில் எழுதிடவோ ?
மேகம் வந்து மறைத்திடுமே !
மண்ணில் எழுதிடவோ ?
மகத்துவம்தான் குறைந்திடுமே !
எழுதுகோல் உயிர் நீத்ததடி 
என்னிலை காணச் சகியாமல்...

Saturday, August 7, 2010

திரிபு ( Distortion )

ஆரத் தழுவி 
முத்தம் பகிர்ந்து 
அங்கம் அளந்து
இதழ் வருடி 
சிகை கோதி 
நகை ரசித்து 
கரவிரல்கள் இருபதும் இறுகக் கோர்த்து 
காதல் பதங்கள் ஆயிரம் மொழிந்து 
இன்தமிழில் செவ்வழகை ஒப்பனை பெருக்கி வர்ணித்து 
இல்லறத்தில் இன்பம் காணும் ஒவ்வொரு நொடியிலும் எங்கோ ஓர் மூலையில் எட்டிப் பார்க்கும் முன்பு உதிர்ந்த காதலின் நினைவுகள் - முள் நீக்கிய பின்பும் பாதம் கொள்ளும் சிறு வலி போல்...

Wednesday, July 28, 2010

காதல் தோல்வி ( Kathal tholvi )

காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி 
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது 
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல் 
இதில் மன்னவரும் மகுடமிழக்க 
விண்ணவரும் வீண் பகை சுமக்க 
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை 
கண்கள் இமைக்காமல் கண்ட 
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே 
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும் 
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ? 
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க 
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...



Wednesday, July 21, 2010

தமிழிசை ( Tamilisai )


போதி னிதழு மிசையூ தலில் விரிந்திட !
காதின் மடலு மசையா தலில் மகிழ்ந்திட !
வாதி னுடலி லசைந்தாடிடும் கொடியேன - உளம்
தீதின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே !


( பொருள் விளக்கம்: போது - மலரும் நிலையிலுள்ள மொட்டு, அத்தகைய மொட்டானது தமிழின் இசையை கேட்டு இன்பத்தில் விரிந்திட, காதின் மடலானது அசையாதிருந்து இசையின் லயத்தில் மூழ்கிட, தென்றல் தீண்ட கிளையின் உடலில் பிணைந்த கொடியினது (வாது - கிளை) சிலிர்த்த அசைவைப்போல் உள்ளமானது இசையை அனுபவித்து தீமையின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே...)